Wednesday, March 24, 2010

பெண்மொழியும் காவலும்

நன்றி : prajan
இலக்கியப் பிரதிகளை உருவாக்குபவர்கள் கடவுள்கள் அல்ல தவறுகளைச் செய்வதற்கும் அவற்றுக்கான காரணங்களை அடுக்குவதற்கும். தமிழிலக்கியப் பிரதிகளை கவனத்தில் கொள்வோமெனில் இன்னும் மானுடம் மனம் திறந்து பேசக்கூடிய எத்தனையோ செய்திகள அப்படியே இருக்கின்றன.

தலித் பிரச்சினைகளை பிரதிகளாக்கிய காலங்களிலும் அது தீவிர உச்சகட்டத்தை அடைந்த நேரத்திலும் தற்போது அது தேவையற்றதென கருதப் படும் காலத்திலும் இன்னும் காத்திரமாக பேசப்பட வேண்டியவை அப்படியேதான் இருக்கின்றன. கதைகளாக்கப் பட வேண்டிய தலித் வாழ்வுகளும் அதன் எதிர்பாராத தீவிரமும் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன. அதைவிட இன்னும் முக்கியமானது என்னவென்றால் தலித் எழுத்தாளர்களே அதன் தீவிரம் தற்போது தேவையற்றது என்று கூறும் சூழல்தான்.

இதே அளவுகோலை வைத்துக்கொண்டுதான் பெண் ஆக்கவாளிகளையும் நோக்க வேண்டியுள்ளது. புதிராக இருக்கின்றாள் பெண் என்னும் அங்கலாயிப்பில் புரியவில்லை பெண் என்று சொல்லி அவர்களைப் பூடகமாக வைத்திருந்த சமூக கோட்பாட்டு அரண்களை யெல்லாம் உடைத்து தன்னை பிரகடனப்படுத்தியது பெண்மொழி எழுத்து.

அது அப்படி தன்னை உடைத்துக் கொண்டு வெளிவந்தபோது எல்லாமே தகர்ந்துபோயின. எந்தெந்த உறுப்புகளை மையமாக வைத்து ஆண் ஆக்கங்கள் பெண்ணைப் பார்த்தனவோ அவை திறக்கப்பட்ட பாசறையிலிருந்து எடுக்கப்பட்ட ஆயுதங்களாக மாறின. அவை காற்றின் எல்லா திசைகளிலும் கல்ந்து பெரும் வீச்சுடன் நெருங்கின. அதிர்ந்த ஆண் ஆக்கங்கள் அவற்றை எதிர்த்தன. கூக்குரல்கள் எழுப்பின. ஆனால் அவற்றையெல்லாம் மீறி பெண்மொழி காலமாக மாறிவிட்டது. அதனை காலத்திலிருந்து யாரும் பிரிக்கமுடியாது.

ஆனால் லீனா மணிமேகலை என்னும் கவிஞரின் கவிதைகள் ஆபாசமாக இருக்கின்றன என்று இந்துத்துவ இயக்கங்கள் காவல் துறையிடம் புகார் கொடுத்திருக்கின்றது என்று ஒரு செய்தி அடிபடுகிறது. அது உண்மையாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அப்படி உண்மையாக இருக்கும் பாட்சத்தில் அதில் என்னவிதமான நியாயம் இருக்கின்றது என்று தெரியவில்லை. அதுவும் அது குறித்து கேள்விகள் கேட்கும் தாத்பரியங்கள் எதுவும் இந்துத்துவ அமைப்புகளுக்கு இல்லை.

இந்துக் கோவில்களில் உள்ள ஆபாசமான சிலைகள். இந்துக்கடவுளர்களின் ஆபாச புராணங்கள் இதெல்லாம் எப்படி நியாயப்படுத்தப்படுபவனாக இருக்கக் கூடும்.
எழுத்து என்பது அவருடைய உரிமை. அவரின் துன்பங்களை அவஸ்தைகளை எழுச்சியை எழுதுவதற்கு அவருக்கு உரிமை உண்டு. அப்படி இருக்கும்போது அது ஆபாசம் ஆபாசமில்லை நியாயத்தீர்ப்பு வழங்க யாருக்கும் உரிமை இல்லை.
எழுத்துதான் சமூகத்தை மாற்றி இருக்கின்றது. அதனால்தான் இந்துத்துவ இயக்கங்கள் இதை தூக்கிப் பிடிக்கின்றன. தீட்டு என ஒதுக்கி வைத்தவைகள் எல்லாம் பாடுபொருளாக மாறிவிட்டன. தடைகளைத் தகர்க்கின்றன. சமூகத்தினை கட்டுடைக்கின்றன. அதனால் தாங்கல் அமைத்துவைத்துள்ள சாதிய அடுக்குகள் சரிந்துவிடுகின்றன அதனால் தங்களின் வியாபாரம் நடக்கவில்லை என்பதுதான் அவர்களைன் இந்த எரிச்சலுக்குக் காரணம். கவலைப் படாதீர்கள் மதவாதிகளே நீங்கள் நினைக்கின்ற எதுவும் இங்கு நடக்காது. தீட்டு என்று நீங்கள் ஒதுக்கிவைத்தவர்கள் எல்லாம் எழுத்தை ஆயுதமாகத் தூக்கிவருகிறார்கள். உருட்டப்பட்ட உத்ராட்சைகளில் உலகை ஆளாலாம் என்ற கனவினை விட்டுவிடுங்கள் தீட்டுத்துணியென நீங்கள் சொன்ன அதுதான் புத்தகங்களாகவும் விடுதலைக்கான கருவியாகவும் பயன்பட வருகின்றன. ஒட்டுமொத்த விடுதலைக்காக பீ வாரிய கரண்டியும் கூடையும் செருப்புத்தைத்த ஊசிகளும் பேனாக்களாகிப் பேசுகின்றன. சேரிகள் பாசறைகளாகின்றன. பாடங்கள் ஊட்டப்படும்

Wednesday, March 10, 2010


அப்படி இன்னும் தெரியவில்லை யாருக்கும்
கடந்தவைகளின்மீதும்
நிகழ்பவைகளின்மீதும்
வினையாற்றும் விவரம்
கருமையின் இருப்பாயிருக்கும்
காலமேகம் பொழியும் மழையின் துயரம்
வேர்களை வேட்டையாடும் பொழுது எதுவாயினும்
அதில் நிகழும் மாற்றத்தின் குடியமர்ந்து
வாழும் குயிலின் பாடலைப் போல
அமைந்திருக்கும் வாழ்வு

Tuesday, March 2, 2010

தலித் பெண்ணெழுத்து: அடைய வேண்டிய பொன் இடம்



(விளாத்திகுளத்திலிருந்து வெளிவரும் கரிசல்கதிர் என்னும் இதழில் வெளியானது)

தமிழ் இலக்கிய வரைவினில் இன்றைக்கு பெண் எழுத்து முக்கியமான இடத்தை அடைந்திருக்கின்றது.சங்க இலக்கியத்திலேயே தமிழில் பெண் ஆக்கவாளிகள் மிகவும் சிறப்பாகவும் தங்களைன் எண்ணங்களை எந்தவிதமான தயக்கமுமின்றி கூறும் தன்மையுடன் இருந்திருக்கின்றனர். வெண்ணிக்குயத்தியார் என்னும் பெண்பால் புலவர் தன் காதலனைக்குறித்து பாடுவதும் அவனைத்தேடி செல்லுதலும் தமிழரின் வாழ்வுக்கு எடுத்துக்காட்டாய் அமைகின்றன. பௌத்த சமண சமயங்களின் பரவலால் வேறுபாடுகளற்றதாய் தமிழ்ச்சமூகம் இருந்தது. அதனால்தான் தற்கொல்லியை முற்கொன்ற குண்டலகேசி கதைகள் எழுதப்பட்டன.சமய இலக்கியக் காலங்களில் ஆண்டாளின் கவிதைகள் அவருடைய கடவுள்சார்ந்த கருத்துக்களை விட்டுவிட்டு பார்க்கின்றபோது அற்புதமான கவிதைகள். கவிதைக்கான தொழில்நுட்பத்துடன் இயங்கக் கூடியன அவை.

அதற்குப்பிறகு தமிழிலக்கிய வெளியில் பெண் எழுத்துக்கான தேக்கம் மிக நீண்டகாலமாகவே இருந்தது என்பது மறுக்கவொண்ணாதது.எங்காவது ஒருவர் எப்போதாவது ஒருவர் எழுதியிருப்பார். ஆனால் அவருடைய ஆக்கங்கள் அத்தனையளவு பேசப்பட்டிருக்குமா என்றால் இல்லை. காதலா கடமையா என்னும் நாவலை எழுதிய சித்தி ஜுனைதா பேகம் இபோதுதான் வெளியே தெரிய ஆரம்பித்திருக்கின்றார். இந்தக் காலக்கட்டத்தில் கவிதையில் பெண் நிலை என்பது மிகவும் மோசமாகவே இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ்க்கவிதை இரு நதிகளாய் கிளைவிட்டு நகர்ந்தபோதும் எந்த நதியிலும் பெண்ணெழுத்துக்கான தடம் பதியப்படவில்லை. வானம்பாடிகளானாலும் நவீன கவிதைகளை உருவாக்கியவர்களானாலும் பெண்களை முன்னிலைப்படுத்தவில்லை. அவரவர் ஆக்கங்களில் வேண்டுமானாலும் பெண்கள் குறித்த சித்திரங்களை எழுதினார்களே ஒழிய பெண் எழுதும் தளம் என்பது உருவாகவில்லை.

அதற்குப் பல காரணங்களை நம்மால் பட்டியல் போடமுடியும்.பெண்கல்வி என்பது மிகவும்குறைவாக இருந்தது. விடுதலை அடைந்த ஆண்டில் ஆயிரம் பெண்களில் ஆறு பெண்கள்தான் படித்திருந்தார்கள் என்றெல்லாம் புறக்காரணிகளை அடுக்கலாம். ஆனால் அவற்றையெல்லாம்விட மிக முக்கியமானது எழுத்து ஆதிக்கக் காரர்களிடமிருந்தது. அது அவர்கள் வீட்டுப்பரணில் பதுங்கியிருக்கும் பூனையைப்போலத் தான் பதுங்கியிருந்தது. இந்திய ஆதிக்கம் என்பது இந்து ஆதிக்கம் தானே. தமிழர்களும் இடைக்காலத்தில் பௌத்த வீழ்ச்சிக்குப் பிறகு காவிமயமாதல் நிகழ்ந்து தமிழகமும் தன்னிலை மறந்த சுடுகாடாக இந்துத்துவ சிந்தனை வெளியில் இருந்தது

அந்தக்காலக்கட்டங்களி தோன்றிய எழுத்து வகைகள் ஆதிக்கவெறி பிடித்தவர்களின் வாழ்வையும் அவர்களின் மொழியும்தான் பதிவாகின.இந்த நிலையில் பொதுவரங்கில் எழுதவந்த பெண்கள் தமிழ்ச்சூழலில் கதைகள் எழுதினார்கள். அதில் அவர்கள் பெண்களை விடுதலைக்கானவர்களாகக் கருதாமல் அவர்களை மற்ற ஆண் எழுத்தாளர்கள் எழுதுவதைபோலவே எழுதினார்கள் என்பதும் கண்கூடு.


தொன்னூறுகளில் தலித் எழுத்து தமிழில் தீவிரமடைகிறபோதுதான் பெண்ணெழுத்தும் தீவிரமடைகின்றது. எப்படி அரசியல்தளத்திலு சமூகத்தளத்திலும் தலித் விடுதலையும் பெண்விடுதலையும் ஒருசேரப் பார்க்கப்படுகின்றதோ அதைப் போலத்தான் இலக்கியத்திலும் பார்க்கப்பட வேண்டும். ஆதிக்கப் புலத்திருந்து கல்வியும் வாசிப்பும் பெண்களுக்கும் தலித்துகளுக்கும் கிடைத்தபோதுதான் அவர்கள் அவர்களுக்கான எழுத்தினை உருவாக்கினார்கள். அந்த எழுத்தின் காத்திரமும் அதன் தேவையும் இன்று சமூகத்தளத்தின் போதாமைகளை எடுத்துப் பேசுகின்றன. தலித் எழுத்தாளர்கள் தொட்ட பிரச்சினைகள் வாழ்வியல் விழுமியங்களாக இருந்து பின்னால் அவை அரசியல் முழக்கங்களாக மாறி அரசின் திட்டங்களாக அவை உருவாகின்றன. இத்தகைய குறைந்தபட்ச சமூக மாற்றத்தையாவது இவ்வகையான எழுத்துக்கள் கொணர்ந்திருக்கின்றன.

இச்சூழலில் பெண்ணெழுத்தின் இன்றைய நிலை யாது என்னும் கேள்வி எழுகிறது. மனுவின் கூற்றுப்படி பெண் பார்ப்பனக் குலத்தில் பிறந்திருந்தாலும் சூத்திரருக்குரிய ஒடுக்குதலுக்கு உள்ளாகிறவளாக இருக்கிறாள். அதனால் பொதுப் பெண்ணியம் எனபதும் அதைச் சார்ந்து இயங்கக் கூடிய இலக்கியத்தளம் மட்டுமே போதும் என்பதையும் தாண்டி தலித் பெண்ணியம் பேசப்படுகிறது. பொதுவான பெண்ணிலக்கியம் தலித் பெண்ணின் விடுதலையைச் சாத்தியப்படுத்துகிறதா? பல பொதுப் பெண்ணிய எழுத்தாளர்கள் மேல்தட்டு மனோபாவதோடு மட்டுமே இயங்குகிறார்கள் என்பதும் கண்கூடு.

தலித் பெண்ணெழுத்து என்பது பொதுப்பெண்ணியத்திலிருந்து எந்தப் புள்ளியில் வேறுபடுகிறது எப்படி அதன் இயக்கம் இருக்கும் என்பது குறித்த பிரக்ஞை ஏதுமற்று சாதி ஒடுக்குமுறைகளையும் அதனால் ஏற்பட்டு துயரவெளிகளையும் ஆக்கங்களாக மாற்றிவிடுவது மட்டுமே ஆகாது. மாறாக பெண் அடக்குமுறைக்கு உள்ளான காலத்தின் சூழ்ச்சிக்குறித்தும் அதன் கூரிய அம்பாகவும் ஆயுதமாகவும் இருக்கின்ற மதம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் தலித் பெண்ணெழுத்தும் சாத்தியமற்றுதான் போய்விடும்.

தலித் எழுத்துக்கான தேவை நிறைவடைந்துவிட்டதாகவும் அது தேங்கிவிட்டதாகவும் கூறுபவர்கள் தலித்திய சிந்தனையின் ஆழத்திலிருந்து புறப்படாதவர்கள். அதேபோல்தான் தலித் பெண்ணெழுத்தும். பெண்ணிய எல்லாவாத அடிமைத்தனத்திற்கும் காரணமாய் இருப்பது ஒன்றுதான் அதுதான் இந்து மதம். தீட்டு என்னும் சொல்லைப் பயன்படுத்தி தன் குடும்பத்தில் உள்ள பெண்களையே வீட்டிற்கு வெளியே வைத்ததுதான் இந்து ஆதிக்க மரபு.இதையே சமூகத்திற்குப் பொருத்தினால் சேரி. உழைக்கின்ற பெண்களை அவர்களின் உழைப்பைச் சுரண்டி அவர்களின் உடல் உபாதைகளைப் பற்றிய அக்கறை ஏதுமின்றி புறந்தள்ளிஅவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான எல்லாவற்றையும் மறுத்து ஆணை குடும்பத்தை சார்ந்து வாழ்வதுதான் அவர்களுக்கு விதிக்கப்பட்டது என்று சொல்லி பெண் என்னும் உயிரை ஒரு பொருளாகக் கூட மதிக்காததுதான் இந்துத்துவம்.

தலித்துகளும் பெண்களும் இந்துத்துவ ஆதிக்கத்தினால் சமூகத்தின் விளிம்பு நிலைக்குத் துரத்தப்பட்டவர்கள் என்றாகின்றனர். சமூகம் இந்த இந்துத்தத்துவத்தினால் ஜனநாயகமற்றதாய் மாறிவிட்டது. இதைக் கருத்துருவாகக்கொண்டு இந்துமத வெளியேற்றமே சமூக விடுதலை என்றாய்ந்து அதை நிலைநிறுத்த நாக்பூரில் அய்ந்து லட்சம் மக்களோடு புத்த மதத்திற்கு மாறினார் புரட்சியாளர் அம்பேத்கர். இந்துவாகப் பிறந்தேன் அது ஒரு விபத்து; ஆனால் கண்டிப்பாக இந்துவாகச் சாக மாட்டேன் என்று சொல்லி ஏறக்குறைய முப்பது ஆண்டுகால தீவிர தேடலுக்குப் பிறகு பவுத்தம்தான் மானுட விடுதலைக்கு சரியான வழி என்று பிரகடனம் செய்து அதை நிறைவேற்றினார் புரட்சியாளர்.

இந்தப் புள்ளியிலிருந்துதான் பெண்ணெழுத்தைப் பார்க்க வேண்டியுள்ளது. இந்துத்துவம்தான் பெண்ணை மனிதப் பிறப்பிலிருந்து கழித்து வைத்தது. பெண்களை இனப்பெருக்கம் செய்வதற்கும் வயல்வெளிகளில் மாடுகளைப் பயன்படுத்துவதைப்போல வீட்டில் வேலைகளை குறிப்பாக ஆணுக்கான வேலைகளைச் செய்வதற்கும் நிர்பந்தப்படுத்தியது. அவர்களின் உடலைவைத்தே அவர்களைப் புறந்தள்ளியோ அல்லது வன்புணர்வு செய்தோ அல்லது அதைக் கொண்டாடி தன்னின்பத்திற்குப் பயன்படுத்திக்கொண்டது. அந்த உடலைப் பயன்படுத்திதான் இன்றைய நவீன பெண்கவிஞர்கள் ஆண் சமூகத்திற்கு எதிராக எழுத ஆரம்பித்தார்கள்

மயிர்கள் சிரைக்கப்படாத என் நிர்வாணம்
அழிக்கப்படாத காடுகளைப்போல்
கம்பீரம் வீசுகிறது

என்று சுகிர்தராணியால் எழுதமுடிகிறது என்றால் அதை பாலியல் கவிதை என்று சொல்லிவிட முடியாது. மறுக்கப்பட்ட யோனிகளையும் முலைகளையும் பதாகைகளாக உயர்த்துவது என்னும் கருத்தியலின் மூலம் அது. ஆனால் இத்தகைய கவிதைகளை ஆண் அறிஞர்கள் பாலியல் கவிதைகள் என்று வகைமைப்படுத்துகிறார்கள். இத்தகைய கவிதைகள் பாலியல் கவிதைகள் அல்ல அவற்றை பெண்மொழிக் கவிதைகள் என்றும் கூட நாம் அழைக்கலாம். ஆணியத்திற்கு எதிராக இந்தக் கவிதைகள் மாறியிருக்கின்றன. அதுவும் நல்லதுதான். ஆனால் வெறுமனே ஆணியம் அல்லது லிங்கமைய வாதம் என்பது பொதுப் பெண்ணியம். அதில் தலித் பெண்ணியத்திற்கான நுண்ணரசியலைக் கட்டக்கூடிய இடம் இல்லாமலே இருக்கின்றது. சமூக அரசியலில் சமத்தன்மை வருவதற்குப் புரட்சியாளர் அம்பேதகர் சொன்ன இந்துக்களிடமிருந்து விடுதலை என்னும் தத்துவத்தைத்தான் நாம் இங்கே பொருத்த வேண்டும். ஆணியம் என்பது இந்துத்துவத்தின் ஓர் ஏற்பாடு.

ஆக, பெண்ணெழுத்து எதை மோதி உடைக்க வேண்டும் என்றால் இந்துத்துவத்தை. அதன் கூறாக இருக்கின்ற இந்துமதத்தை. அதன் முகமூடியாக இருக்கின்ற இந்துத்துவ பயங்கரவாத அரசியலை. அதன் இயங்குதளமாக இருக்கின்ற இந்துப் பண்பாட்டு முதல்வாதத்தை. என்ன நடக்கிறது உண்மையிலே என்று பார்த்தால் பொதுவான பெண் ஆக்கவாளிகள் யாரும் தங்களுடைய இந்து அடையாளத்தை துறந்தாரில்லை. அகில இந்திய அளவில் அரசியலில் இந்து அரசியலுக்கு எதிராகப் பார்க்கப்படுகின்ற பிருந்தா காரத் கூட இந்து அடையாளமாகிய பெரிய பொட்டோடுதான் காட்சி தருகிறார்கள். இந்துத்துவம் சொன்ன பெண் அடையாளங்கள் அனைத்தும் பெண் ஆக்கவாளிகளிடத்தில் இருக்கின்றன. புற அடையாளங்களான உடைகளில் மாற்றங்கள் இருக்கின்றன. இது இப்போது எந்தவிதமான சமூக அக்கறையுமின்றி குடும்ப அடிமைகளாக இருக்கின்ற பெண்கள்கூட அழகியலை முன்னிருத்தி இத்தகைய புற அடையாள மாற்றங்களோடுதான் இருக்கின்றார்கள்.

சமூக முன்னனியினராக இருக்கக்கூடிய பெண் ஆக்கவாளிகள் எந்நிலையிலிருந்து தங்கள் முன்னெடுப்பைத் தொடுப்பது என்பதுதான் நம் வினா. தலித் அரசியல் நிலையில்தான் அதனை முன்னெடுக்கவேண்டும். அரசியலில் எத்தனையோ உயர்பதவிகளில் தலித்துகள் இருக்கின்றார்கள். பெரும்பணக்காரர்களாகவும் இருக்கின்றனர் ஆனால் அவர்களின் மீதான சாதி இழிவு போய்விட்டதா என்றால் இல்லை எல்லாரும் ’அவங்கதான்’ என்றுதான் இன்றளவும் பேசப்படுகிறார்கள். பெண்களும் அப்படித்தான் பெரும்பதவிகளும், செல்வங்களும் இருந்தாலும் பெண் என்னும் எண்ணம்தான் எப்போதும் இருக்கின்றது. பவுத்தர்களாக மாறியபிறகு தலித்துகளுக்கான சமதர்ம வாழ்வு சாத்தியப்படுகிறது, பிற மதங்கள் எல்லாம் இங்கு இந்து சாயலில்தான் இருக்கின்றன.

பெண் அடையாளத்தினை அறிவுத்தளத்திலும் சமூகத்தளத்திலும் நாம் மாற்ற வேண்டியுள்ளது. பாமா,சிவகாமி போன்ற தலைமுறையினர் தலித் இலக்கியத்தின் இயங்குதளத்தினை வெகு ஆழமாக்கி வைத்திருக்கின்றனர். சுகிர்தராணி போன்றோர்கள் பெண்மொழிக்கவிதைகளை அதன் வீரியத்தோடு ஆக்கி இருக்கின்றனர். பெண்ணெழுத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல இந்துத்துவத்திற்கு எதிராக ஆக்கங்களை உருவாக்கும் ஆளுமைகளாக இவர்கள் மாறவேண்டும். பௌத்தம் பேசும் ஆக்கங்களை இவர்கள் தர வேண்டும். பௌத்தமீட்சி ஒன்றுதான் தலித்துகளையும் பெண்களையும் விடுவிக்கும். அதற்கான ஏற்பாடுகளோடு பெண்ணிலக்கியம் பயணப்படவேண்டும். அது இந்தத் தலைமுறை ஆக்கவாளிகளில் கு.உமாதேவியின் கவிதைகளில் வந்துகொண்டிருக்கின்றது என்று நான் அவதானிக்கிறேன்.

Friday, February 19, 2010

தருணம்

தருணத்தின் அமைவு கிட்டாத எதுவும்
இன்மையோடு தொடர்கிறது
வந்ததிலிருந்தே வருகை குறித்த பெருமிதம்
மிகைந்து அழிகிறது துளித்துளியாய்
போகையில் அழிந்த எந்த துவாரமும்
காற்றையோ
நீரையோ
கொண்டு செல்வதில்லை
வருகையில் மிஞ்சும் போவதைக்
குறித்த எந்த பிரக்ஞையுமின்றி
இருக்கின்றோ மெல்லாம் நாம்

Thursday, February 4, 2010

ஏதோ


தீர்க்கமானக் கோடுகளால் வரையக்கூடியன
அல்ல அவை
பகடிகளற்ற சொற்கள் உலவும் வனம்
பிசிறுகள் சற்றேனும் இல்லா மேகம்
ஊறிய தேனில் மிதக்கும் மதுரம்
யாருமற்ற வெளியொன்றின் மௌனம்
எல்லாவற்றிலும்
இருக்கும் உன் எஞ்சிய அழகிடை
என்ன இருக்கின்றடு இன்னும்

யாழன் ஆதி

Friday, January 15, 2010

புத்தகக் கண்காட்சி : புத்தாக்கம் செய்யும் தளம்

எப்படியாவது கடைசி( 10/01/10) நாளன்றாவது புத்தகக் கண்காட்சியைப் பார்த்து விடவேண்டும் என்று மனது துடித்தது. கடந்த வாரம்(03/01/10) ஞாயிறன்றே புத்தகக் கண்காட்சிக்குச் செல்வதாகத்தான் திட்டம். ஆம்பூரிலிருந்தே இமைகள் தோழர்கள் விஜயராஜனும் ஞானவேலும் ஆம்பூரின் அழகிய தமிழ்மகன் தேவாவும் நானும் செல்வதாகத்தான் திட்டமிட்டோம். இவர்களுடன் செல்வது என்பது மிகவும் பிடித்தமான விஷயம். என்னவென்றால் இலக்கியம் குறித்தும் சினிமா குறித்தும் பேசிக்கொண்டே போகலாம். சாப்பாடி பிரச்சினை இருக்காது. வீட்டிலிருந்தே சாப்பாடு கட்டிக்கொண்டு வந்துவிடுவார்கள். கண்டிப்பாக அதில் புளி சோறு இருக்கும் முட்டையுடன். படிக்குங்காலத்தில் எங்காவது சுற்றுலா செல்வது போன்ற உணர்வினைத் தரவல்லது அது. புத்தகக் கண்காட்சியிலும் எந்தெந்த புத்தகங்களை வாங்கலாம் என்றெல்லாம் ஆலோசனை வழங்குவார்கள்.

இதில் என்னவாயிற்று என்றால் தேவா அச்சகத்தில் வேலை வந்துவிட்டது என்று நின்றுவிட்டார். திடீரென்று என்னுடைய அன்பிற்குரிய பேராசிரியர் அய்.இளங்கோவன் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது அவரைப் பார்க்க வேண்டும் என்பது முக்கியமானது எனவே நானும் போகவில்லை. நண்பர்கள் விஜயனும் ஞானவேலும் மாத்திரமே போயிருந்தார்கள். அங்கிருந்து நேரிடையாக வர்ணனைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களுடனே புத்தகக் கண்காட்சியில் இருந்ததைப் போன்று இருந்தது.அடுத்த வாரம் போய்விட வேண்டுமென்று முடிவெடுத்தேன்.

அதனால் கடைசி நாளன்று கிளம்பிவிட்டேன். லால்பாக் தொடர்வண்டியில் ஏறி சென்னை அடைந்து தலித் முரசு அலுவலகத்திற்கு அங்கு ஆசிரியரை சந்தித்து மதிய உணவை அங்கேயே முடித்துக்கொண்டு புத்தகக் கண்காட்சிக்கு வந்து சேர்ந்தபோது மூன்று மணி. தொடர்வண்டியில் வரும்போது தம்பி சோழனுக்கு சொல்லியிருந்தேன். தம்பி சோழன் இயக்குனராவதற்கு முயர்சி செய்துகொண்டிருக்கும் தோழர். எங்கள் ஊர்க்காரர். கூத்துப்பட்டறையின் முக்கியமான நடிகராக இருந்து இப்போது வெளியேறி பயிற்சியாளராக இருக்கின்றாஅர். அதிகம் வாசிக்கக் கூடிய தம்பி. இந்தப் புத்தக கண்காட்சியில் ஏறக்குறைய 5000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கியிருக்கின்றார் என்றால் புரியும் அவருடைய வாசிப்பு தாகம். எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்னும் அவரின் ஆர்வம் அவரை ஆசானாக மாற்றிக்கொண்டுள்ளது. சோழனின் வளர்ச்சி எங்கள் நண்பர்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி.

பேராசிரியர் அய்.இளங்கோவன் எழுதிய நூலின் ஆங்கிலப் பதிப்பை எடுத்துக்கொண்டு புத்தகக் கண்காட்சியில் வைக்க அந்த பிரமாண்டத்துள் நுழைகிறேன். கருப்புப் பிரதிகள் நண்பர் நீலகண்டன் கொள்கை வழி பதிப்பாசிரியர். கண்டதையும் போட்டு பணம் பார்க்க அவர் எண்ணியதே கிடையாது. மாறாக அம்பேத்கர் பெரியார் மற்றும் விடுதலைக் கருத்தியலை உயர்த்திப் பிடிக்கும் நூல்களையே அவர் பதிப்பிப்பார். அவருடைய கடைக்குத்தான் நான் போகவேண்டும். உள்ளே நுழைந்ததும் அவர்தான் கண்ணில்பட்டார். அவரோடே கருப்புப் பிரதிகளுக்குச் சென்று புத்தகத்தை ஒப்படைத்தேன். அங்கே தோழர்கள் கவின்மலரும் சுகிர்தராணியும் வந்தனர். ஆளுக்கொரு வணக்கத்தைப் போட்டு, அப்போதுதான் வந்த விவரத்தையும் சொன்னேன். போய் அனைத்தையும் பார்த்துவருவதாகச் சொல்லிவிட்டும் போனார் சுகி. நானும் கவினும் புத்தகக் கண்காட்சியில் கடைகளைப் பார்த்துக் கொண்டே வந்தோம். பெரிய பெரிய புத்தகங்கள், அழகழகான அட்டை வடிவமைப்புகள் எல்லா புத்தகங்களயும் வாங்கிவிடவேண்டும் என்று மனம் ஆவலாதித்தது. ஆனால் வழக்கமாக நமக்கிருக்கும் பொருளாதார நெருக்கடி நம்மை கையைப் பிடித்து இழுத்துக்கொண்டது. நிறைய புத்தகங்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் கவிதைகளயே வாங்கவேண்டும் என்னும் முடிவோடுதான் சென்றிருந்தேன்.

கவினைக் கேட்டதற்கு பெரிய பெரிய புத்தகங்களை வானகச் சொன்னார்கள். அது நம்மால் ஆகாது என்று ஏற்கெனவே எடுத்த முடிவினை செயற்படுத்த ஆரம்பித்து கவிதைகளை வாங்கினேன். உயிர்மை விளம்பரப்படுத்தியிருந்த சில்வியா பிளாத் போன்றோரின் தொகுப்புகள் வராதது வருத்தமாக இருந்தது.வம்சி புத்தகங்கள் வடிவமைப்பில் புதிய பொலிவினைப் பெற்றிருந்தது. அங்கே கைக்கு அடக்கமாக ஒரு அழகிய புத்தகத்தை வாங்கினேன். வித்தியாசமான அமைப்புடன் இருந்த கிரியா வுக்குப் போனேன். அங்கே திரு.ராமகிருஷ்ணனை சந்தித்தேன். முன்பு ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் பணியாற்றிய போது அவரை சந்த்தித்து இருந்தேன். அதற்குப் பிறகு இப்போதுதான் பார்த்தேன். அவர்களும் கைக்கு அடக்கமாகத்தான் புத்தகங்களை வடிவமைத்து இருந்தனர். ழாக் பிரேவரின் சொற்கள் தொகுப்பை வாங்கினேன். உயிர்மைக்கு வந்து சில கவிதை தொகுப்புகளை வாங்கினேன். அங்கே எஸ்.ராமகிருஷ்ணனும்,சாருவும் புத்தகங்களில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தனர். எஸ்.ராமகிருஷ்ணனின் சட்டைப் பையில் விஐபி அட்டை வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. அது சொல்லவில்லையென்றாலும் அவர் விஐபி தானே!
நேரம் போதவில்லை மறுநாள் பள்ளிக்குப் போகவேண்டிய இருந்தது. சோழனை அனுப்பிவிட்டு தோழர் ஆர்.ஆர்.சீனிவாசனின் மின்னஞ்சல் அழைப்பிற்காக பூவுலகின் நண்பர்கள் அரங்குக்குச் சென்றேன். மிக நல்ல முயற்சி. சுற்றுச்சூழலுக்காகவும் மக்களின் வாழ்வுக்காகவும் அவர் எடுக்கும் படங்கள் மட்டுமல்ல, முயற்சிகளும் தோள் கொடுக்கப் பட வேண்டியவை. வாங்கி வந்திருக்கும் புத்தங்களை இன்னும் படிக்க ஆரம்பிக்க வில்லை. புத்தகக் கண்காட்சி உண்மையிலேயே இவ்வாண்டு எனக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்து இருக்கின்றது என்றால் பொய்யில்லை.

Thursday, October 29, 2009


அண்மையின் கைகளில் என்னைத் தந்துவிட்டு
செல்கிறது காலம்
அதன் துணிவுகளோடு செல்ல இயலாத என்னை
விட்டுவிட்டு சென்றுவிடுவதாக அச்சுறுத்துகிறது
திராணியற்ற ஒரு போர்ச்சேவகனைப் போல
என் வாளையும் போர் உடைகளையும் நான் களைந்துவிட்டு
காத்திருக்கின்றேன்
எதிரிகளின் தண்டனைகளை தரப்போகும் ஆணைகளுக்காய்
போரற்ற பிராந்தியத்தில் என்னை விடவேண்டும் என்னும்
எண்ணம் இருப்பதாய் சொல்லுகிறார்கள் உளவாளிகள்
ஆனாலும் தாக்குதலுக்கு உள்ளாகாமல் இருக்கவும்
முடியாதென்கிறார்கள்
தாக்குதலற்ற போரும்
இழப்புகளற்ற அன்பும்
காதலிலும் இல்லை கண்மணி கிளாடி